தேனி மாவட்டத்தை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள படம் மெய்யழகி.
இந்த படத்தில் பட்டாளம், காதல் சொல்ல வந்தேன் படங்களில் நடித்துள்ள பாலாஜி கதாநாயகனாகவும், ஜெய்குவேதனி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
படத்தின் ஷூட்டிங்கின் போது, 170 அடி ஆழமுள்ள கிணற்றில் கதாநாயகி ஜெய்குவேதனி ‘டூப்' இல்லாமல் குதித்து அதிர வைத்துள்ளார்.
இதுபற்றி படத்தின் இயக்குநர் ஆர்.டி.ஜெயவேல் கூறுகையில், கதைப்படி, தம்பியை காணாமல் இரவு முழுவதும் ஊரெல்லாம் தேடிய கதாநாயகி கடைசியாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கிணற்றுக்கு வந்து பார்க்க, கிணற்றுக்குள் தம்பி தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.
தம்பியை காப்பாற்ற தன் உயிரை துச்சமென மதித்து கிணற்றுக்குள் குதிக்கிறாள்.
இந்த காட்சியில் 170 அடி ஆழமுள்ள கிணற்றில் கதாநாயகி ஜெய்குவேதனி டூப் இல்லாமல் குதித்தார்.
ஆண்களே குதிக்க தயங்கும் அந்த கிணற்றில் குதித்ததால், அவர் அதிகமாக தண்ணீர் குடித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனடியாக அவருக்கு படக்குழுவினர் முதலுதவி செய்து காப்பாற்றினார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் சி.எல்.ஆனந்தன் மகன் அருண் வில்லனாக நடித்துள்ளார்.
மீரா ஜாஸ்மின் அக்காள் ஜெனி ஜாஸ்மின், பாடகர் வேல்முருகன் ஆகியோரும் நடித்துள்ளனர். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக